இலங்கையில் இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், போர்க் குற்றங்கள், இன அழிப்புக்கள் போன்ற விடயங்களுக்கெதிராக இலங்கையை சர்வதேச விசாரணைக்குட்படுத்த அமெரிக்கா உரிய அழுத்தங்களை வழங்கவேண்டுமென அமெரிக்க தூதரக அரசியல்பிரிவு அதிகாரியான அன்ரனி ரென்சுலியிடம் தமிழர் மரபுரிமைப் பேரவை கோரியுள்ளது.
இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதரக அரசியல்பிரிவு அதிகாரியான அன்ரனி ரென்சுலியை தமிழர் மரபுரிமைப் பேரவையினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது தமிழர் மரபுரிமைப் பேரவை அமைப்பின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இக் கலந்துரையாடல் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரவிக்கையில்,
அமெரிக்கத் தூதரகத்தினுடைய அரசியல்பிரிவுப் பொறுப்பதிகாரி அன்ரனி அவர்களோடு முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம்.
அக் கலந்துரையாடலில் , ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவையிலே இலங்கை கலந்துகொண்டுள்ள சூழ்நிலையிலே தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அவருடன் பேசியிருக்கின்றோம்.- என்றார்.